மாகாணசபைத் தேர்தலும் 13ஆவது திருத்தச்சட்ட விவகாரமும், இப்போது அரசியலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒருதரப்பு, மாகாணசபைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. இன்னொரு தரப்பு, மாகாணசபை முறை மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. மேலும் ஒருதரப்பு, இரண்டுக்கும் நடுவே மதில் மேல் பூனையாக – எதையும் சாராதது போன்று காட்டிக் கொண்டிருக்கிறது.
அரசாங்கத்துக்குள்ளே கூட இந்த விவகாரத்தில் பெரும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன. உண்மையில், அரசாங்கத்தினது பேச்சிலும் கூடத் தடுமாற்றங்கள் இருப்பதை அவதானிக்கலாம். மாகாணசபை ஒரு வெள்ளை யானை என்று சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் பேட்டி ஒன்றில், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார். எதற்கும் பயனற்றது, பொதுமக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்வது என்பதே அவரது கருத்து. அவர் தனிப்பட்ட ரீதியாக அதனைக் குறிப்பிடவில்லை. அதிகாரபூர்வமாக - ஜனாதிபதியின் செயலர் என்ற வகையில் தான் அவ்வாறு கூறியிருந்தார்.
சில நாட்களின் பின்னர், அலரி மாளிகையில் ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, மாகாணசபைகளை வெள்ளையானை என்று முத்திரை குத்தும் கருத்தை நிராகரித்தார். மாகாணசபைகள் முழுமையாகத் தோல்வியடைந்து விடவில்லை என்றும், அதிலும் நன்மைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாகாணசபைகள் தொடர்பான அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு இதுவல்ல என்பதே உண்மை. மாகாணசபைகள், அவற்றுக்கான அதிகாரங்கள், 13ஆவது திருத்தச்சட்டம் என்பனவற்றை அரசாங்கத்தரப்பில் அதிகாரமுள்ள தலைவர்கள் ஒருபோதும் வரவேற்றுக் கருத்து வெளியிட்டதில்லை. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விதிவிலக்கல்ல.
இந்தநிலையில், மாகாணசபைகளினாலும் நன்மைகள் உள்ளன என்று கூறியிருப்பதும், அதுவும், மிக முக்கியமான தருணத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் முக்கியமானது. அதாவது 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க அல்லது மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதியே அதற்குச் சார்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
உண்மையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் தனது தற்துணிவின் பேரில், மாகாணசபைகளை முழு அதிகாரங்களுடன் செயற்பட வைத்திருக்க முடியும். அதற்கான ஆணையும் அதிகாரங்களும் அவரிடம் உள்ளன.
ஆனால், அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கவில்லை. மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி அதனை ஒரு வெறும், பயனற்ற பொருளாக மாற்றுவதே அவரது திட்டம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் மாகாணசபை முறைமைக்குப் பதிலாக, கிராமசபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும், அதுவே உண்மையான அதிகாரப்பகிர்வு என்றும் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அதாவது மாகாணசபைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது இந்த அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக இல்லாத போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்குச் சார்பான சில கருத்துகளை முன்வைத்துள்ளது ஆச்சரியமே.
13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டே இதனை நோக்க வேண்டும். அரசியல் சட்ட திருத்த விவகாரத்தில் எந்தவொரு நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று அரசாங்கம் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும், உள்ளூர இந்தியா குறித்த அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவே செய்கிறது.
ஏற்கனவே இந்தியாவுடன் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் ஏற்படக் கூடிய நெருக்கடி, நிலைமைகளை மோசமாக்கி விடும் என்பது அரசாங்கத் தரப்புக்குத் தெரியாமல் போயிருக்காது.
அதுவும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைத்து இந்தியா பேசிய பின்னர், நிலைமையின் தீவிரத் தன்மையை அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருக்காது.
இது தமிழர்களின் பிரச்சினை என்பதற்கு அப்பால், இந்தியாவினது கௌரவப் பிரச்சினையாகவும் கூட மாறி வருவதால், இலங்கை அரசாங்கம் சற்று நிதானமாகவே காய்களை நகர்த்தியாக வேண்டியுள்ளது.
இதனால், 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காட்டிய தீவிரத்தன்மையை இப்போது காட்டவில்லை என்பதை, அன்றாட நடப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
மாகாணசபைகளுக்கும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் ஆதரவான அமைச்சர்கள் பலர் அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கின்றனர்.
அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் மதில் மேல் பூனைகளாக இருந்தாலும், ரவூப் ஹக்கீம், டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ராஜா கொல்லுரே, சந்திரசிறி கஜதீர, ராஜித சேனாரத்ன, றெஜினோல்ட் குரே போன்றவர்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்துள்ளதற்கு ஒரு காரணம்.
ஆளும்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள், 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதை விரும்பவில்லை என்றும் அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பே கூறுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்வது சிக்கலானது.
ஆனால், அதற்காக அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு விடும் என்று கருத முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபைகளை வெள்ளை யானை இல்லை என்று கூறினாலும், அவரது நிலை யானையின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல, யானையே தேவையில்லை என்பது தான். அவரது இலக்கு மாகாணசபைகள் அல்ல, கிராமசபைகள் தான். அந்த இலக்கை அடையும் வரை அரசாங்கம் ஓயப் போவதில்லை.
தற்போதைக்கு அரசாங்கம் தனது முயற்சியில் ஒரு சிறு பின்னடைவை சந்தித்துள்ளது அவ்வளவு தான்.
அதாவது வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கிக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து சற்று விலகி நிற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது அரசாங்கம்.
இந்தியாவின் தரப்பில் இருந்து வரும் எதிர்ப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய சந்தேகம் என்பன, இந்த தயக்கத்துக்கான காரணங்களாக குறிப்பிடலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் அரசாங்கம் அதை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தையும் வைத்துள்ளது.
ஆனாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் இப்போது தயாராக இல்லை. ஏனென்றால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு.
இப்போது அரசாங்கத்தின் கவனம், கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் மீது தான் குவிந்துள்ளது. அதற்குப் பலத்த சவால்கள் உள்ளதால், எப்படியேனும் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் தான் அரசாங்கத்துக்கு நிம்மதி. இதில் சறுக்கல் ஏற்பட்டால், சர்வதேச அளவில் இலங்கையின் பெயர் கெட்டுப்போய் விடும். எனவே, கொமன்வெல்த் மாநாட்டை எந்தப் பிரச்சினையுமின்றி நடத்தி முடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைத்தால், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்ற ஒரு தகவலும் பரவியது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்தை பெரும் பிரச்சினைக்குள் தள்ளிவிடும். எனவே இந்தியாவின் விரோதத்தை இப்போதைக்குச் சம்பாதித்துக் கொள்வதை தவிர்ப்பதற்காக, 13ஆவது திருத்த விவகாரத்தை மெல்ல மெல்ல நகர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.
கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர், இந்த அதிகாரக்குறைப்பு முயற்சிகள் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனாலும், அதனைச் சாதிப்பதற்கு, அரசாங்கத்தின் வசம் கருத்துக்கணிப்பு என்ற ஆயுதம் உள்ளது. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் கருத்துக்கணிப்பை நடத்தும் தற்துணிவை வழங்கியுள்ளது. அதை வைத்தே அவர் தான் நினைத்ததை இலகுவாக அடைந்து விடுவார்.
அலரி மாளிகை ஊடகச் சந்திப்பில், மாகாணசபைகள் தொடர்பான மக்களின் கருத்தை அறிவது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து, இதனை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற வித்தை அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.
எனவே, தயக்கமின்றி அந்த முயற்சியில் அரசாங்கம் இறங்குவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
-கே.சஞ்சயன்