R News: Column
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label Column. Show all posts
Showing posts with label Column. Show all posts

விக்னேஸ்வரன் அரசியல் சூழலை மாற்றுவாரா?; சூழல் அவரை மாற்றுமா?

Written By Unknown on Thursday, July 25, 2013 | 2:20 PM

வட மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வரும் போது மேலெழுந்து வந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிரான குரல்கள் படிப்படியாக மங்கிவிட ஆரம்பித்துள்ளன.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால்விட்ட அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது தமது கட்சி வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மட்டும் கூறி வருகிறார். 

தமது கொள்கைக்கு பொருந்தாததினால் வட மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டால் மாகாண சபை முறைக்கே அவரது கட்சி எதிரானது என்பதால் ஏனைய மாகாண சபைகளில் இருந்தும் அவரது கட்சி உறுப்பினர்களை அவர் விலக்கிக்கொள்வாரா? 

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக அனேகமாக செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரே ஒரு முதலமைச்சர் வேட்பாளர் மடடுமே இப்போதைக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்து. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு வித்தியாசமான நியமனம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பொதுவாக சட்டத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்த போதிலும் நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியல் களத்தில் இறங்குவதில்லை. அவ்வாறு வந்தாலும் ஏற்கனவே அரசியல் தொடர்பு இருந்தால் மட்டுமே அவ்வாறானவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் வட மாகாண சபைக்கு போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் வேட்பாளரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அன்று அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் இன்று அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடுகிறார். அன்று அரச இயந்திரத்தின் ஒரு அம்சமான நீதித்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய நீதியரசர் விகனேஸ்வரன், அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். எப்படி இருக்கிறது?

விகனேஸ்வரன் அறிவுள்ளவர், பண்பானவர், கௌரவமானவர் என்பதை எவரும் மறுக்கப்போவதில்லை. தமிழ் கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்ததை அடுத்து பண்பானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றதோர் கருத்து சிங்கள சமூகத்திலும் தோன்றியுள்ளது. ஆனால் அக்கருத்து தொட்டிலிலேயே இறந்துவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். 
-தமிழ் மிரர்

எவ்வளவு தான் பண்பானவராகவும் அறிவுள்ளவராகவும் கௌரவமானவராவும் இருந்த போதிலும் விக்னேஸ்வரன் அரசியலில் எவ்வளவு தூரத்திற்கு மிளிர்வார் என்பதை காலம் தான் கூற வேண்டும். ஏனெனில் சட்டத் துறையில் நிபுணராக இருந்த போதிலும் அரசியலில் உள்ள அநாகரிகத் தன்மை சட்டத் துறையின் அநாகரிகத் தன்மையைப் பார்க்கிலும் படுமோசமானது என்பதை அவர் உணரவில்லைப் போலும். 

சட்டத்துறையில் எதற்கும் ஒரு வரம்பு (சட்ட வரம்பு) இருக்கிறது. அரசியலில் எந்த அநாகரிகத்திற்கும் வரம்புகள் இருப்பதாக தெரியவில்லை. சட்டமா அதிபரோடு கலந்துரையாடி சில விடயங்களை செய்துகொள்ள முடியும் என அவர் டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார். அரசாங்கம் அவருக்கு அவ்வளவு இலகுவாக செயற்பட இடமளிக்கும் என்று ஊகிக்க முடியாது. 

அவரது இந்த கூற்றை வாசிக்கும் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஞாபகம் வந்தது. அவரும் படு பயங்கர போர் களத்திலும் காணாதவற்றை அரசியலில் கண்டுவிட்டார். பயங்கர போர் களத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் அரசியலுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

எற்கனவே அமைச்சர் வீரவன்ச, விக்னேஸ்வரனை பிரிவினைவாதியாக்கிவிட்டுள்ளார். ஆயுத பலத்தில் தனித் தமிழ் நாட்டை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இப்போது சட்டத்தின் மூலமாக அதனை பெறுவதற்காக சட்ட வல்லுநர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என அவர் கூறயிருக்கிறார். 

விக்னேஸ்வரனை அல்லாது வேறு எவரையாவது தமிழ் கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் அவர் அந்த வேட்பாளரிலும் எதையாவது பயங்கரத்தை கண்டுபிடித்து விடுவார். இவர் போன்றோர் மறந்து விட்ட அல்லது விளங்கிக் கொள்ளாத முக்கிய விடயம் என்னவென்றால் பிரிவினையை நாடியவர்களை நாட்டின் ஐக்கிய கட்டமைப்பிற்குள் வைத்திருப்பதற்காகவே அதிகார பரவலாக்கல் சித்தாந்தத்தை அதன் சிற்பிகள் நூறாண்டுகளுக்கும் முன்னர் பிரேரித்தனர். 

அதாவது அதிகார பரவலாக்கலின் நோக்கமே மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சிக்கு பிராந்திய சபைகளின் அதிகாரத்தை வழங்குவது அல்ல, பிரிவினையை கோரும் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதே. 

எப்போதோ ஒரு நாள் பிரிவினையை கோரிய மக்கள் தேசிய கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறானதோர் நிலைமையே உண்மையான நல்லிணக்கம் என்றழைக்கப்படலாம். ஆனால் அந்த நிலைமையை பலவந்தமாக உருவாக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் தேசிய கட்சிகளை நிராகரிக்கலாம். 

ஆனால் அம்மக்களை வென்றெடுப்பது தேசிய கட்சிகளின் திறமையில் தங்கியிருக்கிறது. ஆனால் அதிகார பரவலாக்கலின் நோக்கத்திற்கு முரணாக செயற்படுவதன் மூலம் அதனை சாதிக்க முடியாது. பிரிவினையை கோரிய மக்களின் பிரிதிநிதிகளும் அதிகார பரவலாக்களை துஷ்பிரயோகம் செய்யாது பெரும்பான்மையினரை வென்றெடுக்க முயல வேண்டும். நடைமுறை எதுவாக இருந்தாலும் சித்தாந்தம் அவ்வாறு தான் கூறுகிறது.

விக்னேஸ்வரன் ஒருபோதும் தனி நாட்டை கோரியவரல்லர். அவரது சட்ட அறிவை பாவித்து தமிழீழத்தை பெறுவதாக இருந்தால் அதற்காக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்றொரு முதலமைச்சர் வேட்பாளருக்கு அவரது சட்ட அறிவை வழங்கலாம்.
 
விக்னேஸ்வரனின் அரசியல் களமிறங்களை அரசாங்கம் பாரதூரமாக கருத்திற் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தான் அவரும் கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. 

பெரிய 'கார்ட்' களை போட்டு விளையாட முற்படுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பலத்தை உணர்ந்திருப்பது தெளிவாகிறது என அமைச்சர் டிலான் பெரேரா கடந்த வியாழக்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தார். ஆனால் அக்கூற்றின் மூலம் அரசாங்கமும் விக்னேஸ்வரன் பெரிய 'கார்ட்' என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. 

நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியலுக்கு வருவது நாகரிகமா என்ற கேள்வியும் இங்கு எழாமலில்லை. அவ்வாறானவர்கள் அரசியலக்கு வருவதனால் அவர்கள் நீதிபதி ஆசனத்தில் இருந்து வழங்கிய தீர்ப்புக்கள் சம்பந்தமாக சிலர் சந்தேகம் கொள்ளலாம்.

மறுபுறத்தில் அவ்வளவு சமூகப்பற்று அல்லது ஜனநாயகப் பற்று இருந்தால் அவ்வாறானவர்கள் பதிவியில் இருந்த காலத்தில் அதனை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு ஏன் வரவில்லை என்றும் வேறு சிலர் கேட்கலாம். 

அரசாங்கம் நீதியரசர்களுக்கும் முப்படைகளில் மூத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் ஓய்வு பெற்ற பின் பல பதவிகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே அவர்களது பதவிக் காலம் பற்றிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதியரசர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் பதவிகளை வழங்குவதை அரசாங்கள் நிறுத்த வேண்டும் என அண்மையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரியவும் கூறியிருந்தார்.

இருந்த போதிலும் பண்பானவர்கள் அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை சமூகம் ஊக்குவிகக் வேண்டும.; ஏனெனில் இன்று அரசியல் சுத்த சாக்கடையாக மாறியிருக்கிறது. அது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கான (பகற் கொள்ளைக்கான) அனுமதிப் பத்திரமாகவே உள்ளது. 

போதாக்குறைக்கு பிரதேச மட்டத்திலும் அரசியல்வாதிகளின் கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை. ஒரு நாளும் தொழிலொன்றை செய்யாதவர்கள் அரசியலுக்கு வந்து கோடிக் கணக்கு பணத்தை வீசி விளையாடுகிறார்கள். 

கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள தமது கட்சியைச் சேர்ந்தவர்களினால் தமக்கு வெளியில் தலைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே கூறுகிறார். ஆனால் அதற்கு அக்கட்சியின் தலைவர்களே தான் போறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர மேர்வின் சில்வா பகிரங்கமாகவே ஒரு அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்தார். அது தொடர்பான ஒழுக்க விசாரணையின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவர் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்தது. ஊடக நிறுவனங்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்படவில்லை. துமிந்த சில்வா இன்னமும் ஐ.ம.சு.கூட்டணியன் நாடாளுமனற உறுப்பினராக இருக்கிறார். 

ஒரு ஆசிரியையை பகிரங்கமாக முழந்தாளிடச் செய்த மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீ.ல.சு.க.வின் வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். பி.பி. ஜயசுந்தர அரச பதவிகளை ஏற்கக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றமே மீண்டும் அவர் அரச பதவி ஏற்கலாம் என்று தீர்ப்பளித்தது. தாம் ஒரு கொலையாளி என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அணமையில் கூறியிருந்தார். அவர் இவ்வளவு காலம் எவ்வாறு தப்பியிருந்தார? இந்த பட்டியல் பல பக்கங்களாக நீடிக்கலாம். 

எனவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேறு எவரையும் குறைகூறிப் பயனில்லை. இதே நிலைமை தான் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்திலும் நாட்டில் நிலவியது. எனவே பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்க்கத்தக்க விடயமாகும். ஆனால் சமூகத்தை திருத்த அரசியலில் பிரவேசித்த பலர் இறுதியில் அந்த சாக்கடை அரசியலின் றிரந்த பிரதிநிதிகளாகியுள்ளனர். 

அரசியல்வாதிகள் இந்த நிலைமையை சீர் செய்வார்கள் என்று கருதுவது முட்டாள் தனமேயல்லாமல் வேறொன்றுமல்ல. மக்களும் இந்நிலைமையை உணர்நது பண்பானவர்களை மட்டுமெ தெரிவு செய்வோம் என்ற முடிவுக்கு வர வேண்டும். 

அதுவும் இப்போதைக்கு சாத்தியம் என்று தெரிவதில்லை. ஈரான் போன்ற நாடுகளில் என்றால் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஒருவரது நடத்தை சிறந்ததாக இருக்க வேண்டும என சட்டமே கூறுகிறது. ஆனால் இங்கு அவ்வாறான சட்டம கொண்டு வரப் போவத யார்?

மேனன், கோத்தபாய, நசீம் உடன்பாடு! சீனாவின் திட்டத்தை முறியடிக்குமா?

Written By Unknown on Sunday, July 14, 2013 | 12:06 PM

இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான இரண்டாவது கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றிருந்தது.
இதற்காகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்,  ஆறு உயர்மட்ட அதிகாரிகளுடன் கொழும்பு வந்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான முத்தரப்புக்கூட்டம் என்று இது கூறப்பட்ட போதிலும் இதில் பங்கேற்ற மூன்று நாடுகளினது பிரதிநிதிகளிலும் சிவ்சங்கர் மேனன் மட்டும் தான். அந்தப் பதவியை வகித்து வருபவராவார்.
இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்ற கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருப்பவர்.
மாலைதீவின் சார்பில் பங்கேற்ற மொஹமட் நசீம் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிப்பவர்
இந்த முத்தரப்பு மாநாட்டில் முக்கியமாக ஆராயப்பட்ட விடயம் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான விடயமே.
அண்மைக்காலத்தில் ஜப்பானுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்ட இலங்கை அரசாங்கம் அதையடுத்து சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு ஒன்றையும் செய்து கொண்டது.
அந்த உடன்பாட்டின் அம்சங்கள் என்ன என்பதை இரு நாடுகளும் வெளியிடாமல் மறைத்து வருகின்றன.
இத்தகைய பின்னணியில் தான் இந்தியா மாலைதீவுடன் இணைந்து முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
சிவ்சங்கர் மேனன் கொழும்பு பறப்பட முன்னர் புதுடில்லியில் உள்ள அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டித் தகவல் வெளியிட்ட இந்திய ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டை முறியடிக்கும் ஒரு நகர்வாகவே இலங்கை மாலைதீவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தன.
இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரும் கூட இந்திய ஊடகங்கள் கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் இந்தியப் பெருங்கடலில் இந்தியா தலைமைப் பாத்திரம் வகிக்கவுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்தழைப்பு உடன்பாடு இந்தியா குறிப்பிடுவது போன்று இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கோ சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்கோ போதுமானதொன்றாக இருப்பதாகத் தெரியவில்லை.
பிரதானமாக இந்த உடன்பாடு இயற்கை அனர்த்தங்களின் போதான மீட்பு பயிற்சி கண்காணிப்பு மாசு கட்டுப்பாடு சுனாமி எச்சரிக்கை சட்டவிரோத கடல்சார் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது கடற்கொள்ளை முறியடிப்பு போன்ற விடயங்களில் தான் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அப்பால் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பொருளாதார கடல் வலயத்தை தேவைப்படும் போது கண்காணிப்பதற்கு இந்தியா தனது வளங்களை வழங்கவுள்ளது.
இவைதான் இந்த முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் முக்கியமான அம்சங்கள்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இந்த உடன்பாடு கொண்டுள்ளதாக இந்தியாவினால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது.
இந்தியா இதைவிடமும் அதிகமான ஒத்துழைப்புகளை இலங்கையிடம் இருந்தும் மாலைதீவிடம் இருந்தும் எதிர்பார்க்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல.
ஆனால் சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள இலங்கையும் மாலைதீவும் தற்போதைய நிலையில் இதற்கு அப்பால் சென்று இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதை விரும்பவில்லை.
அதனால் தான் இந்தியா எதிர்பார்த்தளவுக்கு வலிமையான உடன்பாடு கடந்த வாரம் கையெழுத்திடப்படவில்லை.
எனினும் தற்போதைய நிலையில் இந்த நாடுகளுடன் வலுக்குறைந்த உடன்பாடு உன்றையேனும் செய்வதில் இந்தியா அக்கறை காட்டியது.
ஏனென்றால் இந்த இடைவெளியை சீனா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்ற கரிசனை தான் அதற்குக் காரணம்.
சீனாவின் நகர்வுகளை முறியடிக்கும் இந்தியாவின் மூலோபாயத்திட்டம் நெருக்கடியானதொரு கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் தான் இந்த உடன்பாடு கையெழுத்தாக்கியுள்ளது.
சீனாவின் முத்துமாலை வியூகத்தை உடைப்பதற்காக ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் முயற்சி தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு கடல்வழியாக ஆப்கானிஸ்தானையும் மத்திய கிழக்கையும் அடைவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
ஆப்கானிஸ்தானில் இந்தியா பெரிய முதலீடுகளை செய்துள்ள நிலையில் அதற்கான விநியோகப்பாதை இல்லாதிருப்பது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில்   அரபிக் கடலுக்குள் செல்லும் பாதையிலும் இந்தியாவுக்குத் தடைகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் தான் குவடார் துறைமுகத்தில் இருந்து வெறும் 76 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் சபஹார் துறைமுகத்தை 100 மில்லியன் டொலர் செலவில் அபிவிருத்தி செய்ய இந்தியா முன்வந்தது.
ஈரானுடன் இந்தியா சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இந்த உடன்பாடு சீனாவுக்கு எதிரான இந்தியாவின்  நகர்வுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டது.
இதன்மூலம் மத்திய கிழக்கிற்கான ஒரு வாசலை இந்தியாவினால் திறந்துவிட முடிவதுடன் ஆப்கானிஸ்தானுக்கான விநியோக வழியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா செலவிட முன்வந்த 100 மில்லியன் டொலருக்கு இணையான நிதிஉதவித் திட்டம் ஒன்றை ஈரானுக்கு வழங்க சீனா முன்வந்துள்ளது.
இதனால் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் இருந்து கைநழுவிப் போய் விடலாம் என்ற அச்சம் புதுடில்லிக்கு எழுந்துள்ளது.
சபஹார் திட்டம் கைநழுவினால் அது இந்தியாவின் முறியடிப்பு மூலோபாயத்துக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக அமையும்.
இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இந்தியா உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.
இது இந்தியாவுக்கு திருப்தி தருவதாக இல்லாது போனாலும் இந்த நாடுகளுடான உடன்பாடு கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்றும் நம்புகிறது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ரீதியாக சீனா தனது வளங்களைக் கட்டியெழுப்பி வருகின்ற நிலையில் இலங்கையும் மாலைதீவும் இனிமேலும் அந்த நாட்டுடன் ஒட்டிக்கொள்ளக் கூடாது என்று இந்தியா நினைக்கிறது.
ஆனால் அரசியல் ரீதியாக இலங்கை அரசுடனும் மாலைதீவு அரசுடனும் இந்தியாவுக்கு உள்ள முரண்பாடுகளும் சீனாவின் செல்வாக்கு எதிர்பாராத துறைகளில் இங்கெல்லாம் விரிவடைந்து வருவதும் இந்தியாவின் இந்தக் கனவுக்குக் குறுக்கே நிற்கின்றன.
சுபத்ரா

அடுத்து என்ன செய்யப்போகிறது இந்தியா?

Written By Unknown on Wednesday, July 10, 2013 | 4:30 PM

தனக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை இந்தியா கேட்டுள்ளது. புதுடெல்லி சென்றிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும் இந்தியா இதையே தான் கூறியது. கொழும்பு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இதையே தான் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளார்.
 
கடந்தமாதம் புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியபோது, 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை கொடுத்த வாக்குறுதி மீது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
 
அதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்காத நிலையில், தான் இந்தியா மீண்டும் மீண்டும் வாக்குறுதியை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
 
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியை மதித்து நடக்கப் போவதில்லை என்பதையும், நிலைமை தனது கையை விட்டுப் போகத் தொடங்கி விட்டது என்பதையும், இந்தியா புரிந்து கொண்டு விட்டது என்பதையே, வாக்குறுதி தொடர்பான அதன் வலியுறுத்தல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 
13ஆவது திருத்தச்சட்டம் இப்போது ஒரு பிராந்திய விவகாரமாக மாறுகின்ற சூழலை அவதானிக்க முடிகிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தை எப்படியாவது ஒழித்து விடவேண்டும் என்பதே, அரசதரப்பில் உள்ள, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட கடும் கோட்பாட்டாளர்களின் பிடிவாதமாக உள்ளது.
 
உடனடியாக இதனை ஒழித்து விடுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம், எப்படியாவது இதனைப் பலவீனப்படுத்தியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது.
 
ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கைப் பிரச்சினைக்கு, தான் முன்வைக்கும் தீர்வாகக் கருதுவதால், இந்தியாவுக்கு இது ஒரு பெரிய மானப் பிரச்சினையாக உள்ளது. இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கை ஒழித்தால் அல்லது பலவீனப்படுத்தினால், இந்தியாவுக்கு இரண்டு சிக்கல்கள் ஏற்படும்.
 
ஒன்று இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு இருந்த தார்மீகப் பொறுப்புகள் இல்லாமல் ஆக்கப்பட்டு விடும். அதனால், பிராந்திய ரீதியாக இந்தியாவின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும். இரண்டாவது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா, ஈழத் தமிழர்களின் நலன்களை முற்றிலுமாக உதாசீனப்படுத்தி, அவர்கள் மீது பழிதீர்த்துக் கொண்டு விட்டது என்ற கருத்து வலுப்படும்.
 
விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தி, தமிழர்களை எந்த அதிகாரமுமின்றி முடக்குவதற்கு இந்தியா துணை போகுமேயானால், இந்திய அரசின் மீது பெரும் பழிதான் சுமத்தப்படும். ஏனென்றால், போரின்போது, விடுதலைப் புலிகளை அழித்த பின்னர், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது. அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிய நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் பலவீனப்படுத்துவதை, இந்தியாவினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
 
பல்வேறு விடயங்களில் இலங்கை அரசுடன் இந்தியா விட்டுக் கொடுப்புடன்- சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்ட போதிலும், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியாவினால் அவ்வாறு நடந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்திய அல்லது பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்தி - இந்தியா இந்த விடயத்தில் இலங்கையுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது.
 
ஏனென்றால், இந்த விடயத்தில் மன்மோகன்சிங் அரசாங்கம் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டால், அது காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாகவே பார்க்கப்படும். அதுவும், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தகையதொரு சமரச முடிவு எடுக்கப்படுமானால், அது மிகப்பெரிய அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகதாகவே கருதப்படும்.
 
அதைவிட, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் உயர்ந்தபட்சத் தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டமே உள்ள நிலையில், அதை இலங்கை அரசு நிராகரிக்கும்போது இந்தியாவின் மீது இயல்பாகவே ஓர் அழுத்தம் ஏற்படும்.
 
அதாவது தமிழர் பிரச்சினைக்கான மாற்றுத் தீர்வு என்ன என்பதை, வெளிப்படுத்த வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும். அத்தகைய நெருக்கடி, இந்தியாவை 1987இற்கு முந்திய நிலைக்குக் கொண்டு செல்லும்.
 
எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதே, இந்தியாவுக்கு இன்று மிகவும் வசதியானது.
 
எனவே, இந்தியா திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை நினைவுபடுத்தியும், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று எச்சரித்தும் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறது. ஆனால், இந்தியாவினது இந்த நினைவூட்டல்களையோ, 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தப்படுவது தொடர்பான அதன் கவலைகளைப் பற்றியோ, இலங்கை அதிகம் கரிசனை கொண்டதாகவே தெரியவில்லை.
 
அவ்வாறு இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், 13ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான எந்த நகர்வையும் அது மேற்கொள்வதைத் தவிர்த்திருக்கும். குறிப்பாக, தெரிவுக்குழு தொடர்பான நகர்வுகள் குறைந்தபட்சம் சில நாட்களுக்கேனும் பிற்போடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
 
சிவ்சங்கர் மேனன், இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டிய சில மணிநேரங்களிலேயே தெரிவுக்குழுக் கூட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. அதற்கும் அப்பால், தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு வருவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிவ்சங்கர் மேனனிடம் முன்வைத்திருந்தார்.
 
இதிலிருந்து இந்தியாவுக்கு தனது நிலை என்ன என்பதும், இலங்கை அரசின் நிலை என்ன என்பதும் நன்றாகவே விளங்கி கொண்டிருக்கும். அதாவது, இந்தியா வரைந்துள்ள கோட்டுக்குள் இலங்கை இனிமேலும் நிற்கப்போவதில்லை என்பது இந்தியாவுக்கு விளங்காமல் போயிருக்காது.
 
இந்தநிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பாதுகாக்க, இந்தியா என்ன செய்யப் போகிறது? எத்தகைய வழிமுறையைக் கையாளப் போகிறது? என்பன அரசியல் அரங்கில் மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக எழுந்திருக்கிறது.
-கே.சஞ்சயன்

ஒழிப்பதும் குறைப்பதும் இனவாதம்

Written By Unknown on Friday, July 5, 2013 | 2:03 PM

இலங்கையின் நீண்ட காலமாக நிலவிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987  ஜூலை மாதம் 29 ஆம் திகதி மேற்கொண்ட எழுத்து மூலமான ஆவணமே இலங்கை  இந்திய ஒப்பந்தம் இராணுவம் ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை மூலம் வட மராட்சிப் பிரதேசத்தை கைப்பற்றிய போது இந்திய அரசு  தலையீடு  செய்து யுத்தத்தை நிறுத்தியதோடு தொடர்ந்து இராஜ ரீக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒப்பந்தத்திற்கு இலங்கை ஜனாதிபதியை சம்மதிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 இவ் விடயத்தில் இந்தியாவின் அக்கறை துடிப்பு என்பவற்றை மிக சாணக்கியமாக பயன்படுத்தி ஒப்பந்தம் செய்த ஜே.ஆர். இதனை 1918 இல் சோவியத் ஒன்றியம், ஜேர்மனுடன் செய்த Brest Litovsk ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். வடக்கு, கிழக்கை நிரந்தரமாக இணைக்க மறுத்த ஜே.ஆர். தற்காலிக இணைப்புக்கே ஒப்புக் கொண்டார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வடக்கு  கிழக்குப்பிரதேசத்தில் வந்திறங்கிய இந்திய அமைதி காக்கும் படைக்கும், விடுதலைப்  புலிகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி யுத்தத்தை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயமாக விருந்தது.
இலங்கை  இந்திய ஒப்பந்தத்தையடுத்து சுதுமலையில் நடைபெற்ற மாபெரு ம் மக்கள் கூட்டத்தில் தோன்றிய  பிரபாகரன் இந்தியாவின் புவிசார் அரசியலையும் அதனுடன் தொப்புள் கொடி உறவாக பிணைந்து நிற்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு இந்திய இராணுவ வீரனுக்கு எதிராக ஆயுதம் தூக்கமாட்டோம் எனப் பேசினார்.  அடுத்து 1987 ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சிறு கலந்துரையாடல்களில் பங்கு கொண்டு தமது நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னார்.
அந்த வகையில்  சாவகச்சேரியில் ஒரு கூட்டத்தில் பங்கு கொண்ட பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  நிரந்தரமாக  இணைக்கப்படும் எனவும் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் புனர்வாழ்வுக்கான நிதியை இந்திய அரசாங்கம் தருமெனவும் ராஜீவ் காந்தி  உறுதி அளித்துள்ளதால் வடக்கு, கிழக்கு நிர்வாகத்தை ஏற்பதெனவும் ஜே.வி.பி. தென்னிலங்கையில் ஒப்பந்தத்திற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்ய அது எமக்கு சாதகமாக அமையும் எனவும் கூறினார். பின்னர் செப்டெம்பர் 15 ஆம் திகதி அரசியல்   பொறுப்பாளர் திலீபன் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணா  நோன்பிருந்து உயிர் நீத்தார். அடுத்து ஒக்டோபர் மாதம் குமரப்பா,  புலேந்திரன் உட்பட பன்னிருவர் கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்டு பேச்சு வார்த்தை  பயன் அளிக்காத நிலையில் தங்கள் விதிமுறைகளுக்கு அமைய சயனட் உண்டு மரணித்தார்கள்.
 ஜே. ஆரின் முலோபாயம் நிறைவேறியது. ஒக்டோபர் 10 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி  காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மூண்டது. அப்போது ஜே.ஆர். ஒரு பேட்டியில் இலங்கை ஆளணி மற்றும் நிதி விரயமாகாமல் யுத்தத்தை செய்கின்றேன் என்றார்.
1985 களில் ஏற்பட்ட ஈழ தேசிய விடுதலை முன்னணி போன்று தொடர்ந்து இயக்கங்கள் யாவும் ஐக்கியப்பட்டு கூட்டுத் தலைமையின் கீழ் போராடியிருந்தால் இந்திய  இலங்கை ஒப்பந்தமே ஏற்பட்டிருக்காது. சகோதார இயக்க சிக்கல்கள் , முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. மாறாக நிலைமை வேறாக அமைந்திருக்கும். இலங்கை  இந்திய ஒப்பந்தம் இந்திய இராணுவத்தின் வருகை 13 ஆவது திருத்த சட்டம் என்பவற்றையும் காரணங் காட்டி 1988, 1989 களில் ஜே.வி.பி.  தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இவற்றை இலங்கை மீதான  இந்தியாவின்  விஸ்தரிப்பு வாதம் என்றே ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி )  பிரசாரம் செய்தது.
  ஜே.வி.பி. யின் ஐந்து கோட்பாடுகளில் இந்திய விஸ்தரிப்பு வாதமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஏற்றுக் கொண்ட குறிப்பிட்ட சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பி. தலைவர் றோகண விஜய வீரவை ஒரு தீர்க்க தரிசி என்றே அழைத்தார்கள். அதன் ஒரு பக்க வெளிப்பாடே இன்றைய தேசிய சுதந்திர விடுதலை முன்னணி (விமல் வீரவன்ச) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற  இனவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான துன்பியங்கள் மத்தியிலேயே 1988 இல் 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு மாகாண  சபைகள்  உருவாக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் தொடர்ந்து யுத்தம் நடைபெற்றமையும் , 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமையும் பெரும் தாக்கத்தினை  ஏற்படுத்தியது. இந்திய , இலங்கை  தொடர்பாக தனது கொள்கையை மாற்றிக் கொண்டது.  ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டம் மாகாணங்களின் சுயாட்சிக்கான போதிய அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது பொதுவான மனக்குறையாகும். இதனால் பின்னர் வந்த அரசாங்கங்கள் மங்கள முனசிங்க அறிக்கை ,பிராந்தியங்களின் ஒன்றியம் எனும் சந்திரிக்காவின் தீர்வுப் பொதி ஒஸ்லோ பிரகடனம்  திஸ்ஸ விதாரண அறிக்கை என பல வெளியிடப்பட்டன.  ஆனால்,   இவை ஒன்றும் அமுலுக்கு வரவில்லை.
இலங்கை இனப் பிரச்சினை வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பபந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டமே அமுலுக்கு வந்து எவ்வளவோ  போராட்டங்கள் மத்தியில் உயிரோடு தப்பிப் பிழைத்திருக்கின்றது. இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசுபவர்களின் பாரம்பரிய பிரதேசம் எனவும் வடக்கு, கிழக்கு இணைப்பையும் உறுதி செய்த படியால் ஏனைய தமிழ் அமைப்புக்கள் அதனை ஏற்றுக் கொண்டு  ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசித்தார்கள். ஆனால், விடுதலைப் புலிகளோ இந்திய  இலங்கை ஒப்பந்தம், சந்திரிகாவின் தீர்வுத்திட்டம்,  ஒஸ்லோ பிரகடனம்  தொடர்பான பேச்சு வார்த்தைகளை முறையாகப் பயன்படுத்தாமல் இராணுவ  வழிவகை மூலம்  தமிழ் ஈழத்தை அடைவதே தமது தாகமாக செயற்பட்டார்கள்.
ஆயுதமேந்திப் போராடி 28 வருடங்கள் சிறைவாசம்  அனுபவித்த நெல்சன் மண்டேலா விடுதலையாகி பிரதமர்  கிளார்க் உடன் பேச்சு வார்த்தை செய்து இருவரும் வெற்றி கண்டார்கள்.  இதனைப் பிரபாகரன் , சந்திரிகா வுடன் பரீட்சித்து வெற்றியடையந்திருக்கலாம். இதுவே தலைமைத்துன வேறுபாடு.
இது இவ்வாறிருக்க வட மாகாண சபைத் தேர்தல் என்றதும் சிங்களத் தீவிர வாத அமைப்புகள் 13 தொடர்பாக புதுப் புது வியாக்கியானங்களை முன் வைக்கின்றார்கள். 13 இலுள்ள அதிகாரங்களைக் குறைக்க  வேண்டும் அல்லது 13 இணையே இல்லாதொழிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்துகின்றார்கள். தமிழ்க் கட்சி என்றோ 13 ஆம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாகவோ, இடைக்கால தீர்வாகவோ இறுதித் தீர்வாகவோ அமைய முடியாது என்கின்றது.
இயற்கை விஞ்ஞானத்தில் கருதுவோர், கோட்பாடு , விதி , உண்மை என்றவாறே வளர்ச்சிப் படிநிலை   உள்ளது.   ஒரு விஞ்ஞானி  தனக்கு முன்பிருந்த விதி, உண்மைகளில் இருந்தே புதிய கருதுகோளை உருவாக்கி  உண்மையைக் கண்டுபிடிக்கின்றார்.அவ்வாறே அதிகராப்  பகிர்வு தொடர்பாக இருக்கின்ற ஒரேயொரு சட்டம் இதுவே. இதனை  ஒன்றில் முழுமைப்படுத்த வேண்டும் அல்லது  இதனிலும் வலிதான மாற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டும். மாறாக 13 இணைக் குறைப்பதோ ,ஒழிப்பதோ  எதிர்மறையான ஜனநாயக விரோத இனவாதச் செயற்பாடாகும். எனவே தமிழ் , முஸ்லிம் மக்கள் அவர்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை  ஜனநாயக வாதிகள்  , இடதுசாரிகள், புத்திஜீவிகள்  ,தொழிற் சங்கங்கள் என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டு  அயல் நாடுகள் மற்றும் சர்வதேசத்தின் அணுசரணையுடன் 13 இன் மேல் புதிய தீர்வு ஒன்றை உருவாக்கப் போராட வேண்டும். 

பி. முத்துலிங்கம்
ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் 


அதிகாரப்பறிப்பு: தடுமாறுகிறதா அரசாங்கம்?

Written By Unknown on Sunday, June 30, 2013 | 4:06 PM


மாகாணசபைத் தேர்தலும் 13ஆவது திருத்தச்சட்ட விவகாரமும், இப்போது அரசியலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒருதரப்பு, மாகாணசபைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. இன்னொரு தரப்பு, மாகாணசபை முறை மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. மேலும் ஒருதரப்பு, இரண்டுக்கும் நடுவே மதில் மேல் பூனையாக – எதையும் சாராதது போன்று காட்டிக் கொண்டிருக்கிறது.
 
அரசாங்கத்துக்குள்ளே கூட இந்த விவகாரத்தில் பெரும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன. உண்மையில், அரசாங்கத்தினது பேச்சிலும் கூடத் தடுமாற்றங்கள் இருப்பதை அவதானிக்கலாம். மாகாணசபை ஒரு வெள்ளை யானை என்று சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் பேட்டி ஒன்றில், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார். எதற்கும் பயனற்றது, பொதுமக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்வது என்பதே அவரது கருத்து. அவர் தனிப்பட்ட ரீதியாக அதனைக் குறிப்பிடவில்லை. அதிகாரபூர்வமாக - ஜனாதிபதியின் செயலர் என்ற வகையில் தான் அவ்வாறு கூறியிருந்தார்.
 
சில நாட்களின் பின்னர், அலரி மாளிகையில் ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, மாகாணசபைகளை வெள்ளையானை என்று முத்திரை குத்தும் கருத்தை நிராகரித்தார். மாகாணசபைகள் முழுமையாகத் தோல்வியடைந்து விடவில்லை என்றும், அதிலும் நன்மைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
மாகாணசபைகள் தொடர்பான அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு இதுவல்ல என்பதே உண்மை. மாகாணசபைகள், அவற்றுக்கான அதிகாரங்கள், 13ஆவது திருத்தச்சட்டம் என்பனவற்றை அரசாங்கத்தரப்பில் அதிகாரமுள்ள தலைவர்கள் ஒருபோதும் வரவேற்றுக் கருத்து வெளியிட்டதில்லை. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விதிவிலக்கல்ல.
 
இந்தநிலையில், மாகாணசபைகளினாலும் நன்மைகள் உள்ளன என்று கூறியிருப்பதும், அதுவும், மிக முக்கியமான தருணத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் முக்கியமானது. அதாவது 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க அல்லது மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதியே அதற்குச் சார்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
 
உண்மையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் தனது தற்துணிவின் பேரில், மாகாணசபைகளை முழு அதிகாரங்களுடன் செயற்பட வைத்திருக்க முடியும். அதற்கான ஆணையும் அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. 
 
ஆனால், அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கவில்லை. மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி அதனை ஒரு வெறும், பயனற்ற பொருளாக மாற்றுவதே அவரது திட்டம்.
 
பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் மாகாணசபை முறைமைக்குப் பதிலாக, கிராமசபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும், அதுவே உண்மையான அதிகாரப்பகிர்வு என்றும் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
 
அதாவது மாகாணசபைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது இந்த அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக இல்லாத போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்குச் சார்பான சில கருத்துகளை முன்வைத்துள்ளது ஆச்சரியமே.
 
13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டே இதனை நோக்க வேண்டும். அரசியல் சட்ட திருத்த விவகாரத்தில் எந்தவொரு நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று அரசாங்கம் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும், உள்ளூர இந்தியா குறித்த அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவே செய்கிறது.
 
ஏற்கனவே இந்தியாவுடன் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் ஏற்படக் கூடிய நெருக்கடி, நிலைமைகளை மோசமாக்கி விடும் என்பது அரசாங்கத் தரப்புக்குத் தெரியாமல் போயிருக்காது.
 
அதுவும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைத்து இந்தியா பேசிய பின்னர், நிலைமையின் தீவிரத் தன்மையை அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருக்காது.
 
இது தமிழர்களின் பிரச்சினை என்பதற்கு அப்பால், இந்தியாவினது கௌரவப் பிரச்சினையாகவும் கூட மாறி வருவதால், இலங்கை அரசாங்கம் சற்று நிதானமாகவே காய்களை நகர்த்தியாக வேண்டியுள்ளது.
 
இதனால், 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காட்டிய தீவிரத்தன்மையை இப்போது காட்டவில்லை என்பதை, அன்றாட நடப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
 
மாகாணசபைகளுக்கும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் ஆதரவான அமைச்சர்கள் பலர் அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கின்றனர். 
 
அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் மதில் மேல் பூனைகளாக இருந்தாலும், ரவூப் ஹக்கீம், டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ராஜா கொல்லுரே, சந்திரசிறி கஜதீர, ராஜித சேனாரத்ன, றெஜினோல்ட் குரே போன்றவர்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்துள்ளதற்கு ஒரு காரணம்.
 
ஆளும்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள், 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதை விரும்பவில்லை என்றும் அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பே கூறுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்வது சிக்கலானது.
 
ஆனால், அதற்காக அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு விடும் என்று கருத முடியாது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபைகளை வெள்ளை யானை இல்லை என்று கூறினாலும், அவரது நிலை யானையின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல, யானையே தேவையில்லை என்பது தான். அவரது இலக்கு மாகாணசபைகள் அல்ல, கிராமசபைகள் தான். அந்த இலக்கை அடையும் வரை அரசாங்கம் ஓயப் போவதில்லை.
 
தற்போதைக்கு அரசாங்கம் தனது முயற்சியில் ஒரு சிறு பின்னடைவை சந்தித்துள்ளது அவ்வளவு தான்.
 
அதாவது வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கிக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து சற்று விலகி நிற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது அரசாங்கம்.
 
இந்தியாவின் தரப்பில் இருந்து வரும் எதிர்ப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய சந்தேகம் என்பன, இந்த தயக்கத்துக்கான காரணங்களாக குறிப்பிடலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் அரசாங்கம் அதை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தையும் வைத்துள்ளது.
 
ஆனாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் இப்போது தயாராக இல்லை. ஏனென்றால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு.
 
இப்போது அரசாங்கத்தின் கவனம், கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் மீது தான் குவிந்துள்ளது. அதற்குப் பலத்த சவால்கள் உள்ளதால், எப்படியேனும் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் தான் அரசாங்கத்துக்கு நிம்மதி. இதில் சறுக்கல் ஏற்பட்டால், சர்வதேச அளவில் இலங்கையின் பெயர் கெட்டுப்போய் விடும். எனவே, கொமன்வெல்த் மாநாட்டை எந்தப் பிரச்சினையுமின்றி நடத்தி முடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
 
13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைத்தால், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்ற ஒரு தகவலும் பரவியது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்தை பெரும் பிரச்சினைக்குள் தள்ளிவிடும். எனவே இந்தியாவின் விரோதத்தை இப்போதைக்குச் சம்பாதித்துக் கொள்வதை தவிர்ப்பதற்காக, 13ஆவது திருத்த விவகாரத்தை மெல்ல மெல்ல நகர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.
 
கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர், இந்த அதிகாரக்குறைப்பு முயற்சிகள் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனாலும், அதனைச் சாதிப்பதற்கு, அரசாங்கத்தின் வசம் கருத்துக்கணிப்பு என்ற ஆயுதம் உள்ளது. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் கருத்துக்கணிப்பை நடத்தும் தற்துணிவை வழங்கியுள்ளது. அதை வைத்தே அவர் தான் நினைத்ததை இலகுவாக அடைந்து விடுவார்.
 
அலரி மாளிகை ஊடகச் சந்திப்பில், மாகாணசபைகள் தொடர்பான மக்களின் கருத்தை அறிவது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து, இதனை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற வித்தை அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.
 

எனவே, தயக்கமின்றி அந்த முயற்சியில் அரசாங்கம் இறங்குவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

-கே.சஞ்சயன்

இந்தியாவையும் தேசியவாதிகளையும் சமாளிக்கும் அரசாங்கத்தின் சட்ட திருத்தம்

Written By Unknown on Thursday, June 13, 2013 | 4:06 PM

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளின் சில அதிகாரங்களை ரத்துச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சில சிங்கள தேசியவாத கட்சிகள் மிக ஆவலோடு விரும்பிய மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தல் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தில் இல்லை.  

அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது.

சில சிங்கள தேசியவாத கட்சிகள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மாகாண சபைகளுக்குறிய காணி மற்றும் பொலிஸ் அதகாரங்களை ரத்துச் செய்யாமல் மிக அண்மையில் ஜாதிக்க ஹெல உறுமய விடுத்த கோரிக்கையொன்றில் இருந்த சில விடயங்களை மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஏன்? மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அனுபவிப்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் விரும்புகின்றார்களா?

அவர்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் கை வைக்காமல் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அண்மைக்கால சில சம்பவங்களை அலசிப் பார்த்தால் அது தெளிவாகிவிடும்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்தே அதிகார பறிப்பு பற்றிய கூச்சல் எழத் தொடங்கியது. ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வைத்திருப்பதைப் பற்றி சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக 2012ஆம் ஆண்டு இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக கருத்து வெளியிட்டு இருந்தார். 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இத்தேர்தலை நடத்துவதாகவே அப்போது ஜனாதிபதி கூறியிருந்தார். 

உண்மையிலேயே 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அத்தேர்தலை நடத்துவது என்று பாரதூரமாக நினைத்தே ஜனாதிபதி அப்போது அவ்வாறு கூறினாரோ என்னவோ தெரியாது. ஆனால் இந்தியா இந்த கூற்றை பற்றிப் பிடித்துக் கொண்டது. அதன் பிரகாரமே கடந்த மார்ச் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதென்ற விடயமும் உள்ளடக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளுக்கு தமது இருப்பை மக்களுக்கு அறிவிக்க பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு, குறிப்பாக சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது இருப்பை அறிவிக்க பொருளாதார பிரச்சினைகளை தொட முடியாது. அது அரசாங்கத்தின் தலைவர்களின் கோபத்திற்கு உள்ளாகும் காரணமாகும். எனவே அவர்கள் அடிக்கடி இனப்பிரச்சினையை பிடித்துக் கொள்கிறார்கள். 

செப்டெம்பர் மாதம் நெருங்கவே அவர்கள் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி கூச்சலிட ஆரம்பித்தனர். முதலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவே சர்ச்சையை ஆரம்பித்தார். அவரே பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என முதலில் கோஷம் எழுப்பினார். 

பின்னர் ஜாதிக்க ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது. சிங்கள மக்களின் கண்ணோட்டத்தில் தாம் தேசிய சுதந்திர முன்னணியை விட சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக மாகாணசபை முறையையே இல்லாமல்; செய்யும் வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என அக்கட்சி கோஷமிட ஆரம்பித்தது. இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவும் கிடைத்தது.

அவர்களது குரல் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குரஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸூடன் தொலைபேசி மூலம் பேசி மாகாண அதிகாரங்களை பறிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அரசாங்கம் பெரும் அசௌகரித்திற்கு உள்ளாகியிருக்கும் என்று ஊகிக்க முடியும் ஏனெனில் தாமே சிங்கள மக்களின் பாதுகாவலன் என்று காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் தேசியவாத கட்சிகளின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அதேவேளை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேணையின் போது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் இந்தியாவை பகைத்துக் கொள்ளவும் முடியாது. 

இதனிடையே ஹெல உறுமய, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இதனால் அரசாங்கம் மேலும் அசௌகரியத்திற்குள்ளாகும் என பலர் நினைத்த போதிலும் அந்த திருத்தத்திற்குள் அரசாங்கத்திற்கு பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. 

முன்னர் கூறியதைப் போல் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்வதற்காக ஹெல உறுமய இந்த திருத்த சட்;ட மூலத்தை கொண்டு வரவில்லை. மாறாக மாகாண சபைகளுக்குறிய சில அதிகாரங்களை ரத்துச் செய்வதனையே அது நோக்கமாக கொண்டது. 

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு மேலதிகமாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தையும் ரத்துச் செய்து சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்காரம் பெற வேண்டும் என்ற நிலையும் ரத்துச் செய்ய வேண்டும் என்றே ஹெல உருமய கேட்கிறது. 

தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என்று கேட்பது யதார்த்தம் அல்ல என ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண சபைக் கூட்டத்தின் போது கூறியிருந்தார். அதாவது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் பலித்துள்ளது. அது தான் அவர் கூறும் சர்வதேச நிலைமை என்பது புலனாகிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் கோபத்திற்குள்ளாகாமல் தேசியவாதிகளோடு சேர்ந்து செயற்பட ஹெல உறுமயவின் இந்த திருத்த சட்ட மூலம் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை கொடுத்தது. அரசாங்கம் என்ன செய்ததென்றால் ஹெல உறுமயவின் சட்டமூலத்தில் இருந்த நான்கு காரணங்களில் இரண்டை மட்டும் எடுத்து அரசியலமைப்பை திருத்தப் போகிறது. 

அதன் பிரகாரம் பொலிஸ், காணி அதகாரங்களில் கை வைப்பதில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது. இனி 9 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் விரும்பினால் போதும்.

இதனை அனேகமாக இந்தியா எதிர்க்காது. ஏனெனில் தமிழீழத்தை அமைப்பதற்காகவே தமிழ் கட்சிகள் ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை கோரின. இந்தியா தமிழீழத்தை விரும்பவில்லை. அக்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களை சமாளிப்பதற்காகவே இந்தியா அப்போது மாகாண இணைப்பை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டது.

அதிகர பரவலாக்கல் என்ற அர்த்தத்தில் மாகாண இணைப்பு அவசியமானதொன்றல்ல. ஏனெனில் அதிகார பரவலாக்கலின் ஒரு நோக்கம் நிர்வாகத்தை மக்களுக்கு சமீபமாக்குவதேயாகும். ஆனால் மாகாண இணைப்பானது இப்போது தமிழர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருப்பதால் அவர்கள் அதனை தொடர்ந்து கோரி வருகிறார்கள். இந்தியாவுக்கு அதைப் பற்றி இப்போது அவ்வளவு அக்கறை இருக்கும் என்று கூற முடியாது. அது இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியும்.

அரசியலமைப்பில் மாகாண சபை அதிகார பட்டியல், (மத்திய அரசாங்கத்திறகு) ஒதுக்கப்பட்ட அதிகார பட்டியல் மற்றும் ஒருங்கியல் (பொது) அதிகார பட்டியல் என மூன்று பட்டியல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதாக இருந்தால் சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் அதற்காக பெற வேண்டும். அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி பெரும்பாலான மாகாண சபைகளின் ஒப்புதல் பெற்றால் போதுமானதாகும்.

அனேகமாக மத்திய அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் கட்சியே தெற்கில் பெரும்பாலான மாகாண சபைகளிலும் பதவியில் இருக்கும். எனவே அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒருங்கியல் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயம் தொடர்பாகவும் இலகுவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியும். 

சுருக்கமாக கூறின் இதன் மூலம் ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மாகாண சபைகள் விரும்பினால் அரசாங்கத்தின் மோசமான திட்டங்களை தோற்கடிக்க முடியும் என சித்தாந்த ரீதியில் வாதிட முடியுமாக இருந்த போதிலும் அது நடைமுறையாகப் போவதில்லை.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதகற்காக சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் ஒரு மாகாண சபை விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது. எனவே அது ஏனைய மாகாண சபைகளுக்கு இழைக்கும் அநீதி என ஹெல உறுமய வாதாடுகிறது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதேவேளை நடைமுறையில் இனி ஒருங்கியல் பட்டியல் விடயத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரமே இல்லாமல் போய்விடுகிறது.

இதனையும் இந்தியா எதிர்க்கும் என்று எதி;ப்பார்க்க முடியாது. ஏனெனில் சித்தந்த ரீதியில் இதில் தவறு இல்லை. சிலவேளை இதன் மூலம் தமிழ் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து, ஆளம் கட்சி; மாகாண சபையை கைப்பற்றிக் கொண்டு, போரின் பின்னர் தமிழ் மக்கள் தம்மோடு இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டிக் கொள்வதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger