இதற்காகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஆறு உயர்மட்ட அதிகாரிகளுடன் கொழும்பு வந்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான முத்தரப்புக்கூட்டம் என்று இது கூறப்பட்ட போதிலும் இதில் பங்கேற்ற மூன்று நாடுகளினது பிரதிநிதிகளிலும் சிவ்சங்கர் மேனன் மட்டும் தான். அந்தப் பதவியை வகித்து வருபவராவார்.
இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்ற கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருப்பவர்.
மாலைதீவின் சார்பில் பங்கேற்ற மொஹமட் நசீம் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிப்பவர்
இந்த முத்தரப்பு மாநாட்டில் முக்கியமாக ஆராயப்பட்ட விடயம் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான விடயமே.
அண்மைக்காலத்தில் ஜப்பானுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்ட இலங்கை அரசாங்கம் அதையடுத்து சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு ஒன்றையும் செய்து கொண்டது.
அந்த உடன்பாட்டின் அம்சங்கள் என்ன என்பதை இரு நாடுகளும் வெளியிடாமல் மறைத்து வருகின்றன.
இத்தகைய பின்னணியில் தான் இந்தியா மாலைதீவுடன் இணைந்து முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
சிவ்சங்கர் மேனன் கொழும்பு பறப்பட முன்னர் புதுடில்லியில் உள்ள அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டித் தகவல் வெளியிட்ட இந்திய ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டை முறியடிக்கும் ஒரு நகர்வாகவே இலங்கை மாலைதீவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தன.
இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரும் கூட இந்திய ஊடகங்கள் கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் இந்தியப் பெருங்கடலில் இந்தியா தலைமைப் பாத்திரம் வகிக்கவுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்தழைப்பு உடன்பாடு இந்தியா குறிப்பிடுவது போன்று இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கோ சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்கோ போதுமானதொன்றாக இருப்பதாகத் தெரியவில்லை.
பிரதானமாக இந்த உடன்பாடு இயற்கை அனர்த்தங்களின் போதான மீட்பு பயிற்சி கண்காணிப்பு மாசு கட்டுப்பாடு சுனாமி எச்சரிக்கை சட்டவிரோத கடல்சார் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது கடற்கொள்ளை முறியடிப்பு போன்ற விடயங்களில் தான் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அப்பால் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பொருளாதார கடல் வலயத்தை தேவைப்படும் போது கண்காணிப்பதற்கு இந்தியா தனது வளங்களை வழங்கவுள்ளது.
இவைதான் இந்த முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் முக்கியமான அம்சங்கள்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இந்த உடன்பாடு கொண்டுள்ளதாக இந்தியாவினால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது.
இந்தியா இதைவிடமும் அதிகமான ஒத்துழைப்புகளை இலங்கையிடம் இருந்தும் மாலைதீவிடம் இருந்தும் எதிர்பார்க்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல.
ஆனால் சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள இலங்கையும் மாலைதீவும் தற்போதைய நிலையில் இதற்கு அப்பால் சென்று இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதை விரும்பவில்லை.
அதனால் தான் இந்தியா எதிர்பார்த்தளவுக்கு வலிமையான உடன்பாடு கடந்த வாரம் கையெழுத்திடப்படவில்லை.
எனினும் தற்போதைய நிலையில் இந்த நாடுகளுடன் வலுக்குறைந்த உடன்பாடு உன்றையேனும் செய்வதில் இந்தியா அக்கறை காட்டியது.
ஏனென்றால் இந்த இடைவெளியை சீனா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்ற கரிசனை தான் அதற்குக் காரணம்.
சீனாவின் நகர்வுகளை முறியடிக்கும் இந்தியாவின் மூலோபாயத்திட்டம் நெருக்கடியானதொரு கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் தான் இந்த உடன்பாடு கையெழுத்தாக்கியுள்ளது.
சீனாவின் முத்துமாலை வியூகத்தை உடைப்பதற்காக ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் முயற்சி தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு கடல்வழியாக ஆப்கானிஸ்தானையும் மத்திய கிழக்கையும் அடைவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
ஆப்கானிஸ்தானில் இந்தியா பெரிய முதலீடுகளை செய்துள்ள நிலையில் அதற்கான விநியோகப்பாதை இல்லாதிருப்பது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலுக்குள் செல்லும் பாதையிலும் இந்தியாவுக்குத் தடைகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் தான் குவடார் துறைமுகத்தில் இருந்து வெறும் 76 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் சபஹார் துறைமுகத்தை 100 மில்லியன் டொலர் செலவில் அபிவிருத்தி செய்ய இந்தியா முன்வந்தது.
ஈரானுடன் இந்தியா சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இந்த உடன்பாடு சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நகர்வுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டது.
இதன்மூலம் மத்திய கிழக்கிற்கான ஒரு வாசலை இந்தியாவினால் திறந்துவிட முடிவதுடன் ஆப்கானிஸ்தானுக்கான விநியோக வழியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா செலவிட முன்வந்த 100 மில்லியன் டொலருக்கு இணையான நிதிஉதவித் திட்டம் ஒன்றை ஈரானுக்கு வழங்க சீனா முன்வந்துள்ளது.
இதனால் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் இருந்து கைநழுவிப் போய் விடலாம் என்ற அச்சம் புதுடில்லிக்கு எழுந்துள்ளது.
சபஹார் திட்டம் கைநழுவினால் அது இந்தியாவின் முறியடிப்பு மூலோபாயத்துக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக அமையும்.
இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இந்தியா உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.
இது இந்தியாவுக்கு திருப்தி தருவதாக இல்லாது போனாலும் இந்த நாடுகளுடான உடன்பாடு கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்றும் நம்புகிறது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ரீதியாக சீனா தனது வளங்களைக் கட்டியெழுப்பி வருகின்ற நிலையில் இலங்கையும் மாலைதீவும் இனிமேலும் அந்த நாட்டுடன் ஒட்டிக்கொள்ளக் கூடாது என்று இந்தியா நினைக்கிறது.
ஆனால் அரசியல் ரீதியாக இலங்கை அரசுடனும் மாலைதீவு அரசுடனும் இந்தியாவுக்கு உள்ள முரண்பாடுகளும் சீனாவின் செல்வாக்கு எதிர்பாராத துறைகளில் இங்கெல்லாம் விரிவடைந்து வருவதும் இந்தியாவின் இந்தக் கனவுக்குக் குறுக்கே நிற்கின்றன.
சுபத்ரா