தயாரிப்பாளராக முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்து சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கியுள்ளார். நிறுவனத்துக்கு வுண்டர்பார் ஸ்டுடியோ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இவரது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதே பெயர்தான் என்பது நினைவிருக்கலாம். வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் முதலில் தயாரித்த படம் 3. அனிருத் இசையில் இதில் இடம்பெற்ற கொல வெறிடி பாடல் உலகையே கலக்கியது. சோனி நிறுவனம் இந்தப் பாடல்களை வெளியிட்டது. மீண்டும் அதே அனிருத் இசையில், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படப் பாடல்களும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் பாடல்கள்தான் இன்று சக்கை போடுபோடுகின்றன. இந்த தொடர் வெற்றியைக் கண்ட தனுஷ் இப்போது சொந்த இசை நிறுவனம் தொடங்கியுள்ளார். தன் தயாரிப்பு நிறுவனப் பெயரையே இந்த இசை நிறுவனத்துக்கும் சூட்டியுள்ளார். விரைவில் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு குறித்து அறிவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ்.