பாரதீய ஜனதா தலைமையின் மீது வெறுப்படைந்த, முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அக்கட்சியிலிருந்து விலகி புதியக் கட்சியை தொடங்கவுள்ளார்.
இந்நிலையில் ஆதரவாளர்கள், விலகும் அவரது முடிவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதாக வந்த செய்திகளை எடியூரப்பா கடுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வரும் டிசம்பர் மாதம் வரை அவர்களை காத்திருக்கவிடுங்கள். பாரதீய ஜனதாவிலேயே தொடர்ந்து இருப்பேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதீய ஜனதாவை விட்டு விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மந்திரி சபையில் இருக்கும் எனது ஆதரவாளர்களுக்கு அங்கு தொந்தரவு கொடுக்கப்பட்டால், ஆட்சி நிலைக்காது என்று நான் எச்சரிக்கிறேன்.
வரும் டிசம்பர் மாதம் கட்சியிலிருந்து விலகும் எனது செய்தியை தலைமைக்கு தெரியப்படுத்துவேன். டிசம்பர் மாதம் எனது எம்.எல்.ஏ பதவியை துறந்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த வருடம் கர்நாடகாவில், தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவர்களை அழைத்து எடியூரப்பா பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.