விஜய் நடித்த துப்பாக்கி படம் வசூலில் பெரிய சாதனையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கேரளாவில் இதுவரை வெளியான அத்தனை விஜய் படங்களின் வசூல் சாதனையையும் இந்தப் படத்தின் வசூல் தாண்டி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
பல சர்ச்சைகள், விதம் விதமான விமர்சனங்களுக்கு மத்தியில் து்பபாக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் பன்ச் வசனம் இல்லாத இன்னும் ஒரு படம் என்ற புதிய அந்தஸ்தும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளதால் படத்திற்கு கூட்டம் கட்டி ஏறிக் கொண்டபடிதான் உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பெரிய வெற்றி விஜய்யை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாம்.
மேலும் இப்படம் கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். அத்தோடு இல்லாமல் அங்கு இதுவரை வெளியான விஜய் படங்கள் வசூலித்ததை விட இந்தப் படம் அதிக அளவில் வசூலித்துள்ளதாம்.
அதேபோல ஆந்திராவிலும் இப்படம் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது விஜய் தரப்பை மேலும் குஷிப்படுத்தியுள்ளதாம்.
இந்த சந்தோஷத்துடன் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து துப்பாக்கி படக் குழுவினருக்கு விருந்தளித்து அசத்தியுள்ளார். அந்த விருந்து பிரமாதம் என்று இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.