விஜயகாந்த்துடன் மோதலில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ள தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வடிவேலுவிடமிருந்து தட்டிப் பறித்து விட்டாராம் சந்தானம். இதுதான் தமிழ்த் திரையுலகில் இப்போது பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் கவுண்டமணிக்குப் பிறகு தனக்கென தனி பாணி காமெடியில் கலக்கி வருபவர் வடிவேலு மட்டுமே. இவரும் விவேக்கும் இணைந்தும், தனித்தும் காமெடியில் பின்னிப் பெடலெடுத்தனர். இருவருக்கும் இணையான ஒரு காமெடியன் இதுவரை வரவில்லை.
இடையில் வந்த சந்தானம் கூட கவுண்டமணியை அப்படியே பச்சையாக காப்பியடித்துதான் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஸ்டைல் என்று எதையுமே சொல்ல முடியவில்லை என்பதே திரையுலகினரின் கருத்தும் கூட.
வடிவேலுவுக்கு அரசியல் ரூபத்தில் ஏழரை நாட்டுச் சனி பிடித்து அவர் ஓரம் கட்டப்படவே அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் சந்தானத்தைத் தேடி போக ஆரம்பித்தன. இளம் ஹீரோக்களையும் அவர் நைஸ் பண்ணி வைத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் சந்தானத்தை நாட வேண்டிய நிலை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலு முழு வீச்சில் நடிக்கப் போகிறார். சில படங்களை அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் வடிவேலு படத்தை சந்தானம் தட்டிப் பறித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தேமுதிக எம்.எல்.ஏவான மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கும் படம் பட்டத்து யானை. இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்து அறிமுகமாகிறார். இதில் வடிவேலுவை காமெடிக்குப் போட முடிவானது. வடிவேலுவும் படத்தை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில்தான் விஷால் மூலமாக காமெடி பார்ட்டை கைப்பற்றி விட்டாராம் சந்தானம்.
வடிவேலுவும் விஷாலும் இணைந்து திமிரு படத்தில் நடித்துள்ளனர். அதேபோல விஷாலும், சந்தானமும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ஏன் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுடன், சந்தானமும் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் விஷால் படத்தில் வடிவேலு நடிக்க கிடைத்த வாய்ப்பை, சந்தானம் தட்டிப் பறித்திருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.