'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய இந்தியா அனுமதிக்காது. இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' என்று இந்திய பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 'மாகாண சபைகளை நிறுவுவதற்காகவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையையும் திருத்தச் சட்டத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது. இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா ஆகியோரிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' எனவும் அவர் கூறியுள்ளார். 'இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது' என்றும் அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 'சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (பி.பி.சி)